இந்தியாவில் வரும் ஜூலை 1 ஆம் தேதிமுதல் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான டோக்கனைசேஷன் விதிமுறை அமலுக்கு வர இருக்கிறது. இது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மக்களிடையே அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றன. ஆன்லைன் வர்த்தகங்கள், வணிக இணைய தளங்களில் நேரடியாக கார்டு விபரங்களை உள்ளீடு செய்து பொருட்களை வாங்குவதை மக்கள் பலரும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில், வணிக இணையதளங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தரவுகளை உள்ளீடு செய்து வைத்திருப்பது பல்வேறு சிரமங்களை மக்களுக்கு அளிப்பதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சரி செய்யவே, கிரெடிட் கார்டுகளுக்கான டோக்கனைசேஷன் என்னும் விதிமுறையை கையில் எடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
இந்த விதிமுறை மூலமாக, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு விபரங்களை இனி ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் சேமிக்க முடியாது. ஏற்கனவே சேமிக்கப்பட்ட வாடிக்கையாளர் பெயர், பின், சிவிவி, வேலிடிட்டி காலம் போன்ற அனைத்து தகவல்களும் அகற்றப்பட இருக்கிறது. இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு வந்தபின்னர், வர்த்தக நிறுவனங்கள் மக்களின் கார்டு விபரங்களை தங்களது இணையதளங்களில் சேமிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
இதன்மூலம், நீங்கள் ஒவ்வொருமுறை பணப்பரிவர்த்தனை செய்யும் போதும், கார்டு எண், வேலிடிட்டி, சிவிவி, பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்யவேண்டும். கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்த உடன் Secure your Card அல்லது Save Card as per RBI guidelines என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன்பின்னர் கார்டு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதைத் தொடர்ந்து வழக்கம்போல, ஓடிபியை உள்ளீடு செய்து பணப்பரிவர்த்தனை செய்யலாம்.
இந்த நடைமுறை மூலமாக கார்டுகளின் தகவல்களை ஆன் லைன் நிறுவனங்கள் தங்களது இணையதளங்களில் சேகரிக்க முடியாது. இது மக்களின் பணப்பரிவர்தனையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் என்கிறார்கள் அதிகாரிகள்.
Comments
Post a Comment